search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை காலம்"

    • தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக்கூடும்.
    • குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கோடை காலமானது இரண்டு விதமான நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஒன்று அதிகப்படியான வெப்பம். இன்னொன்று குடிநீர் தேவை அதிகரிப்பு.

    வெப்ப அலை பிரச்சனை குறித்து 2 நாட்களுக்கு முன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். விரிவான அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட்டேன். அடுத்து குடிநீர் தேவைகள் குறித்த ஆலோசனைக் கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும், மாநிலத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளாக விளங்கக்கூடிய தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் குறைந்த அளவு மழை பெய்தது. இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறைச்சூழல் குறித்து, தலைமைச் செயலாளரும், பிற துறைச் செயலாளர்களும் விளக்கினார்கள்.

    இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. எனவே, தற்போது அணைகளில் உள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டிய கடினமான சூழ்நிலையில் நாம் உள்ளோம்.

    இதனை கருத்தில் கொண்டு அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

    தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 150 கோடி ரூபாய் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதனை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளையும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

    குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களும், நகராட்சி நிர்வாக துறை செயலாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களும், தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, தடைகளின்றி பராமரித்திட வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் பிரச்சனைகள் ஏற்படும்போது, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று ஆணையர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

    இந்த கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்படுத்துவதற்கு, சீரான, தடை இல்லாத மின்சாரம் அவசியம். எனவே இத்தகைய திட்டப்பணிகளுக்கு மின்சாரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு மின்வாரியத்தின் தலைவரை கேட்டுக் கொள்கிறேன்.

    ஊராட்சிப் பகுதிகளில், சிறிய குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறக்கூடிய பல கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் வறண்டு இருக்கின்றன. இவற்றுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்தோ அல்லது லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களை இப்பணிகளில் முழுமையாக ஊரக வளர்ச்சித் துறை செயலாளரும் இயக்குனரும் ஈடுபடுத்திட வேண்டும்.

    நமது மாநிலத்தில் வாக்குப்பதிவு முடிந்தும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்க கூடிய நிலையில், இந்தப் முக்கியப் பணிகளில் எந்தவிதமான சுணக்கமும் ஏற்பட்டு விடாமல் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களையும் கண்காணித்து வருமாறு தலைமைச் செயலாளரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

    மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் மேற்பார்வை அலுவலர்கள் தொடர்ந்து நேரில் சென்று குடிநீர் விநியோகப் பணிகளை ஆய்வு செய்து, பற்றாக்குறை உள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை பற்றி உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.

    நமது மாநிலம் இத்தகைய குடிநீர் பற்றாக்குறைச் சூழலை சந்திப்பதால், அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டு அடுத்த இரண்டு மாதங்களில் இந்த பற்றாக்குறையால் நமது மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கோடை காலத்தில் தண்ணீரின் தேவையும் அதிகம். கோடையில் தண்ணீர் கிடைப்பதும் குறைவு. இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, இ. பெரியசாமி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைவர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி. வினய், பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிருவாக இயக்குநர் எஸ். சிவராசு, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் தான் அதிக வெயில் வாட்டி வருகிறது.
    • ஈரோட்டில் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தினமும் வெயிலின் அளவு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் காலையிலேயே வெயில் காரணமாக வெப்பத்தின் தாக்கம் ஆரம்பித்து மாலை 6 மணிக்கு பிறகும் நீடிக்கிறது. ஆனால் பகல் நேரங்களில் வெயில் கடுமையாக உள்ளது. இதனால் மதிய நேரத்தில் வெப்பம் சுட்டெரித்து வருகிறது.

    இந்த நிலையில் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து தற்போது 109 டிகிரி வரை வெயிலின் தாக்கம் பதிவாகி வருகிறது. குறிப்பாக தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் தான் அதிக வெயில் வாட்டி வருகிறது. மேலும் இந்திய அளவில் வெப்பநிலை பதிவில் முக்கிய இடம் பிடித்து வருகிறது.

    இதனால் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில் வெயில் தாக்கம் மிகவும் அதிகளவில் வாட்டி வதைக்கும் வகையில் இருந்து வருகிறது. இதனால் ஈரோட்டில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாத நிலையில் வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.

    வெயிலின் தாக்கம் காரணமாக மதிய நேரங்களில் முக்கியமான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

    வாகன ஓட்டிகளும் வெளியே செல்வதை தவிர்த்து வருகிறார்கள். வெயில் காரணமாக வெளியே செல்லும் பெண்கள் முகத்தில் துணியும் அணிந்த படியும், குடை பிடித்து கொண்டும் சென்று வருகின்றனர்.


    ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் பழங்கள் விற்பனை கடைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் ரோட்டோரங்களில் ஜூஸ் கடைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, சாத்துக்குடி, மொலாம் பழம், தர்பூசணி ஆகிய பழ வகைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் ஈரோட்டில் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். ரோடுகளில் அனல்காற்று வீசுகிறது. இதனால் ஈரோட்டில் பல பகுதிகளில் கடை மற்றும் வீடுகள் முன்பு தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் ஈரோடு மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் ஈரோட்டில் அதிகபடியான வெயில் வாட்டி வருவதால் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கடை வீதி பகுதிகளில் கடை வைத்திருப்பவர்கள் பந்தல்கள் அமைத்துள்ளனர். மேலும் ஈரோடு திருவேங்கடம் வீதியில் தென்னங்கீற்று பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளது. முக்கிய பகுதிகளிலும் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து வருகிறார்கள்.

    இதே போல் ஈரோட்டில் பல பகுதிகளில் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் கேன்கள் வைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி மற்றும் பல அரசு அலுவகங்களிலும் தண்ணீர் கேன்கள் வைக்கப்பட்டு உள்ளது. இதில் தண்ணீர் குடித்து விட்டு செல்கிறார்கள்.

    மேலும் ஈரோட்டில் மூலப்பட்டறை வ.உ.சி.பார்க் ரோடு, கருங்கல்பாளையம், பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் முன்பும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் கடை வைத்து இருப்பவர்கள் தண்ணீர் கேன் வைத்து உள்ளனர். மேலும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களுக்கு கேன்கள் மூலம் தண்ணீர் வழங்கி வருகிறார்கள்.

    • தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது.
    • மாதுளை விலை சற்று குறைந்திருக்கிறது.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள் வருகின்றன.

    இதுபோக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறி, கீரை வகைகள், பழங்கள் வருகிறது. அந்த வகையில், தினமும் 700-க்கும் மேற்பட்ட லாரிகளில் 7 ஆயிரத்து 500 டன் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.

    தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு, வெப்பம் அதிகரிப்பால் காய்கறி மற்றும் பழங்களின் விளைச்சல் குறைந்துள்ளது.

    எனவே, கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி மற்றும் பழங்களின் அளவு நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், கோயம்பேடு மார்க்கெட்டில் 850 பழக்கடைகள் உள்ளன. தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் பழங்களின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து, சென்னை கோயம்பேடு மார்க்கெட் அண்ணா அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்க தலைவர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-

    கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பதால் பழங்களின் விலை அதிகரித்து வருகின்றது. பழங்கள் மற்றும் பழச்சாறுகளின் தேவை காரணமாக பழங்களின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்களின் விலை ரூ.25 வரையிலும், திராட்சை, அன்னாசி, கிர்ணி போன்ற பழங்களின் விலை ரூ.10-ம் உயர்ந்துள்ளது. தர்பூசணி விலை ரூ.5 அதிகரித்துள்ளது.

    அதேநேரம், மாதுளை விலை சற்று குறைந்திருக்கிறது. கடந்த வாரம் ரூ.260 வரை விற்பனையான மாதுளை தற்போது ரூ.240-க்கு விற்பனையாகிறது. தற்போது மாம்பழம் சீசன் தொடங்கியிருப்பதால் மாம்பழங்களின் வரத்து அதிகரித்து இருக்கிறது. அந்தவகையில் கடந்த வாரம் ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனையான மாம்பழம், தற்போது ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் காலங்களில் மாம்பழம் விலை குறையவே வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது
    • சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது. ஏப்ரல் 23 அன்று சேலத்தில் 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதனால் சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆம்லெட் போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இருவர் முயன்றுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்க முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் அவர்களை விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

    • பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்குவதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்பதை ஆய்வு செய்தார்.
    • தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஜூன் வரை இதன் தாக்கம் இருக்கும் என தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கல்வித்துறை உயர் அதிகாரிகளை அடையாறில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், இயக்குனர் அறிவொளி, மாதிரி பள்ளிகள் இயக்குனர் சுதன், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், பாட நூல் கழக இயக்குனர் கஜலட்சுமி, தேர்வுத்துறை இயக்குனர் சேதுவர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது பற்றியும் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கான தேர்வு முடிவுகளை எப்போது வெளியிடலாம் என்பது பற்றியும் விரிவாக விவாதித்ததாக தெரிகிறது.

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மே 6-ந் தேதி தோவு முடிவுகள் வெளியாகும் என ஒரு தற்காலிக தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தேதியில் வெளியிட வாய்ப்புள்ளதா? என்பது பற்றியும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். இதே போல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை எந்த தேதியில் வெளியிட வாய்ப்பு உள்ளது? என்பது பற்றியும் கேட்டறிந்தார்.

    மாநிலம் முழுவதும் புதிய மாணவர் சேர்க்கை எந்த அளவில் நடைபெறுகிறது? எத்தனை லட்சம் மாணவர்கள் சேருவார்கள்? என்பது பற்றியும் ஆலோசித்தார். பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்குவதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்தார்.

    இப்போது வெயில் சுட்டெரிப்பதால் பள்ளிக்கூடங்களை ஜூன் முதல் வாரம் திறக்க முடியுமா? அல்லது கடந்த ஆண்டைப் போல் பள்ளி திறப்பை தள்ளி போடலாமா? என்பது பற்றியும் ஆலோசித்தார்.

    பெரும்பாலான பள்ளிகள் ஜூன் 3-ந்தேதி திறப்பதற்கு தயாராகி வருவதால் அந்த தேதியில் திறக்க சொல்லலாமா? அல்லது வேறு தேதியை அறிவிக்கலாமா? என்பது பற்றியும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஜூன் வரை இதன் தாக்கம் இருக்கும் என தெரிகிறது. எனவே பள்ளிக்கூடங்கள் திறப்பதை ஜூன் 2-வது வாரத்துக்கு தள்ளி போட முடியுமா? என்று ஆலோசித்ததாகவும் தெரிகிறது.

    • பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
    • குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம். ஈரமான ஆடைகளை பயன்படுத்தலாம்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் இயல்பைவிட 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து, வாட்டி வதைக்கிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் கோரத் தாண்டவத்தை பார்க்க முடியும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, தமிழ்நாட்டில் சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 5 டிகிரி வரை வெப்ப அலை அதிகரித்து வெயில் உக்கிரமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    'எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கிவிடலாம், ஆனால் ஒரு மழைக்கு நம்மால் தாங்க முடியாது' என்ற பேச்சு இருந்து வருகிறது. ஆனால் எவ்வளவு மழையை தாங்கிவிடலாம் போல, ஆனால் இப்போது அடிக்கும் வெயிலை தாங்க முடியவில்லை என்று சொல்லும் நிலை வந்துவிட்டது. அந்தளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இந்த கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்வதுதான் ஒரே வழி. அதற்கு பல தரப்பில் இருந்து அறிவுரைகள், பாதுகாப்பு வழிமுறைகள் தெரிவிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் வானிலை ஆய்வு மையமும் கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? எதை செய்ய வேண்டும்? எதனை செய்யக் கூடாது? என்ற வழிமுறைகளை தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    * தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீரை முடிந்தளவு அடிக்கடி குடிக்க வேண்டும்.

    * லேசான, வெளிர் நிறம் மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம். வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி எடுத்துச் செல்வது அவசியம்.

    * பயணத்தின் போது தண்ணீர் பாட்டில்களை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.

    * மயக்கம் மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.


     

    * சர்க்கரை-உப்பு கரைசல், வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்சி, வடிகஞ்சி, எலுமிச்சை தண்ணீர், மோர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இவைகள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும்.

    * வெளியில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளையோ, செல்லப் பிராணிகளையோ விட்டுவிடக்கூடாது.

    * வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைக்கலாம்.

    * குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம். ஈரமான ஆடைகளை பயன்படுத்தலாம்.

    இதுமட்டுமல்லாமல், வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நபருக்கு வெப்பத்தால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆகவே அதுபோன்ற நபருக்கு முதலுதவி சிகிச்சை எவ்வாறு அளிக்க வேண்டும் என்பது பற்றியும் ஆய்வு மையம் விளக்கியுள்ளது.

    அதன்படி, வெப்பத்தின் தாக்கத்தால் சோர்வடையும் நபரை நிழலின் கீழ் படுக்க வைக்கவேண்டும். ஈரத்துணியால் அவரை துடைத்து கழுவ வேண்டும். சாதாரண வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரை தலையில் ஊற்றலாம். அவருடைய உடல் வெப்பநிலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சர்க்கரை - உப்பு கரைசல், எலுமிச்சை சர்பத் ஆகியவற்றை வழங்கலாம். அதன் பின்னர் அருகில் உள்ள சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

    • வருகிற 28-ந்தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும், இயல்பைவிட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும்.
    • தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    கோடை காலம் தமிழ்நாட்டில் தொடங்கி வாட்டி வதைத்து வருகிறது. ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் விளைவாகவும் வெயிலின் கொடுமை நாளுக்குநாள் அதிகரிக்கிறது.

    அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    அந்தவகையில் நேற்று முன்தினம் சேலத்தில் 108 டிகிரியும், அதற்கு முந்தைய நாள் ஈரோட்டில் 109 டிகிரியும் என வெயில் தன்னுடைய கோர முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது. இது மேலும் வரக்கூடிய நாட்களிலும் அதிகரித்தே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை எச்சரிக்கும் விதமாக இயல்பைவிட 5 டிகிரி வரை அதிகரித்தால் விடுக்கப்படக்கூடிய 'மஞ்சள் எச்சரிக்கை' தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி, வருகிற 28-ந்தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும், இயல்பைவிட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் எனவும் எச்சரித்து இருக்கின்றனர்.

    இதில் இன்று (வியாழக்கிழமை) திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 வடக்கு உள் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

    பொதுவாக வானிலை ஆய்வு மையம் வெயிலின் அளவை செல்சியஸ் என்ற அளவிலேயே குறிப்பிடுகிறது. அதனை 'பாரன்ஹீட் டிகிரி' என்ற அளவில் மாற்றுகிறோம். அந்த வகையில் மேற்சொன்ன செல்சியஸ் அளவின் படி பார்க்கும் போது, இயல்பைவிட 5 டிகிரி முதல் 9 டிகிரி வரை வெப்பம் அதிகரித்திருக்கும்.

    அதனைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய 24 வட மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 4 முதல் 7 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    மற்ற இடங்களில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 100.4 டிகிரி வரை வெயில் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் கட்டுப்பாடு காரணமாக சில நாட்கள் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதன் காரணமாக விற்பனை மந்தமாக இருந்தது.
    • தமிழ்நாட்டில் சாதாரண நாட்களில் 1 லட்சம் பெட்டி கொண்ட பீர் பாட்டில் விற்பனையாகும்.

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரிக்கிறது. பொதுவாக அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்தரி வெயில் காலமான மே மாதத்தில் தான் வெயிலின் உக்கிரம் இந்த அளவுக்கு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அதிலும் திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகம் நாடி வருகின்றனர்.

    ஆனால் மது பிரியர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஜில் பீர் அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஜில் பீருக்காக கூட்டம் அலை மோதுகிறது.

    இதுபற்றி டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் கட்டுப்பாடு காரணமாக சில நாட்கள் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதன் காரணமாக விற்பனை மந்தமாக இருந்தது. ஆனால் இப்போது விற்பனை மளமளவென உயர்ந்து வருகிறது. வெயில் சுட்டெரித்து வருவதால் டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் இப்போது விதவிதமாக பீர் வகைகளை கேட்டு வாங்கி குடிக்கிறார்கள். அவர்களுக்காக எப்போதும் தட்டுப்பாடின்றி பீர் வழங்குகிறோம். சூப்பர் ஸ்டிராங்பீர், பிளாக் நைட் மேக்ஸ் சூப்பர் ஸ்டிராங் பிரிமீயம் பீர், பிளாக் பேர்ல் டிரிபிள் சூப்பர் ஸ்டிராங் பீர், கமாண்டோ சூப்பர் ஸ்டிராங் பீர் என பல்வேறு ரக பீர் வகைகள் டாஸ்மாக் கடைகளில் வழங்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் சாதாரண நாட்களில் 1 லட்சம் பெட்டி கொண்ட பீர் பாட்டில் விற்பனையாகும். ஆனால் இப்போது 1 லட்சத்து 40 ஆயிரம் பெட்டி பீர் விற்பனையாகி வருகிறது.

    40 சதவீதம் அளவுக்கு பீர் வகைகள் விற்பனை அதிகமாகி உள்ளதால் கூடுதலாக பீர் பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மே மாதம் இன்னும் விற்பனை அதிகமாகும் என்பதால் மதுபான தொழிற்சாலைகளில் மது உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று முன்தினம் ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவானது.
    • ஆந்திர மாநிலம் அனந்தபூரில் 110.3 டிகிரி, ஒடிசா மாநிலத்தில் 109.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

    சேலம்:

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது. நேற்று முன்தினம் ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவானது.

    இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது. நேற்று சேலத்தில் 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    நேற்று ஆந்திர மாநிலம் அனந்தபூரில் 110.3 டிகிரி, ஒடிசா மாநிலத்தில் 109.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

    நேற்று முன்தினம் ஈரோட்டில் அதிக வெப்பம் பதிவான நிலையில், நேற்று சேலத்தில் அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சிறுவர்கள், இளைஞர்கள் வெயிலில் செல்லும்போது சரும நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    • பஸ், ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் வெளியில் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் எஸ்.சந்திரசேகர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இருப்பது வழக்கம். கால சூழல் மாற்றத்தால் வெப்பத்தின் தாக்கம் தற்போது அதிகரித்து உள்ளது. இயல்பைவிட அதிகமாக வெப்பம் தாக்குதலுக்கு நாம் ஆளாகும்போது, உடலில் சோர்வு, தலை சுற்றல், தலைவலி, கால்வலி போன்றவை ஏற்படும்.

    வெயில் அதிகமாக முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை எளிதாக தாக்கக்கூடும். உஷ்ணம் தாங்க முடியாமல் அவர்கள் சுயநினைவு இழக்க நேரிடும். உடலில் நீர் சத்து குறைந்து வலிப்பு ஏற்படக்கூடும்.

    சிலருக்கு வெப்ப பக்கவாதம் (ஹீட் ஸ்டோக்) பாதிப்பும் உண்டாகலாம். இந்த பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் காலை 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

    தளர்வான ஆடைகள், பருத்தி உடைகளை அணிவதில் இருந்து தப்பிக்கலாம். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடை பிடித்தும், தொப்பி அணிந்தும் செல்லலாம். கட்டாயம் தண்ணீர் பாட்டில் கையில் வைத்திருக்க வேண்டும்.

    தண்ணீரை அடிக்கடி பருக வேண்டும். இதன் மூலம் நா வறட்சி, படபடப்பு, சோர்வு, உடல் அசதி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    வீட்டிற்குள் இருந்தாலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மோர், இளநீர், பழங்கள் போன்றவற்றை அருந்த வேண்டும். குளிரூட்டப்பட்ட ஜூஸ் பழ, வகைகளை சாப்பிடக்கூடாது.

    சிறுவர்கள், இளைஞர்கள் வெயிலில் செல்லும்போது சரும நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. முகம் கருப்பாக மாறிவிடும். அதனால் வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் கிரீம் தடவி செல்ல வேண்டும். கோடை காலத்தில் ஏற்படக்கூடிய வியர்வை கட்டி, வேர்க்குரு போன்றவற்றை தடுக்க தினமும் 2 முறை குளிக்க வேண்டும்.

    வேலை நிமித்தமாக வெளியில் செல்பவர்கள் வெளியில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஓட்டல் உணவு நல்லதல்ல. பழைய கஞ்சி உடலுக்கு நல்லது. தற்போதைய சீசன் பழங்களை பருகலாம். தர்பூசணி, தயிர் சாதம், மோர் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

    பஸ், ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் வெளியில் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது வயிற்றுபோக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். வெப்ப பக்கவாதம் சிலருக்கு உயிர் இழப்பையும் ஏற்படுத்தி விடும். எனவே வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெயிலில் செல்லாமல் வீட்டில் இருப்பது நல்லது.

    வெப்ப தாக்குதலால் ஏற்படும் பாதிப்புக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
    • வரும் 25-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும்.

    தமிழக உள் மாவட்டங்களில் 27-ந்தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 43 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    23, 24-ந்தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    வரும் 25-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு வருகிற 25-ந்தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் உயர் வெப்பநிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது.

    ஈரோடு:

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு வருகிற 25-ந்தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் உயர் வெப்பநிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது.

    இதைத்தொடர்ந்து நேற்றும் 2-வது முறையாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

    இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை ஈரோடு பிடித்துள்ளது. நேற்று ஈரோட்டில் 109.40 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பாவில் 110.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி முதல் 2 இடத்தை பிடித்துள்ளது.

    ×